ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரம் என்பது உயிர் மூச்சு போன்றது. நம் நாட்டில் கோடான கோடி மக்கள் உள்ளனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு  விதமான கருத்துகளை உடையவர்களாக இருப்பார்கள்-அவர்கள் வளர்ந்த விதம், சூழ்நிலை, படித்தவை, பழகிய மனிதர்கள் போன்றவற்றைப் பொறுத்து.

ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பலர் பலவிதமான கருத்துகளைக் கூறுவார்கள். அது அவர்களது சுதந்திரம்.  நமக்கு நாம் சொல்லுவது தான் சரி என்று தோன்றும். பிறிதொருவருக்கு அவரது கருத்து தான் சரி என்று தோன்றும்.நமது கருத்து சரியாக இருக்கலாம். அல்லது அவரது கருத்து சரியாக இருக்கலாம். அல்லது இருவரது கருத்துக்களுமே தப்பாக இருக்கக் கூடும். எது எப்படி இருந்தாலும், நம் கருத்துக்கு எதிர் கருத்து சொல்பவர் மேல் கோபப்படுவதும் , அவர்கள் மீது கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பதும் தவறு. அப்படி செய்தால் அது நம் மனப்பக்குவமின்மையையே உணர்த்துகிறது.




ஒருவர் நம் கருத்துகளை எதிர்க்கின்றார் என்றால் அதற்குப்  பல காரணங்கள் இருக்கலாம். சிலர் அந்த விஷயத்தில் போதிய அறிவு இல்லாததால் எதிர்த்திருப்பர். சரியான முறையில் விளக்கி சொன்னால் சிலர் ஏற்பர். சிலர் புரிந்தாலும் தோற்றதாகி விடும் என்று மீண்டும் மறுத்து பேசுவர். மேலும் சிலரது புரிதல் நிலை நமது நிலைக்கு மிகவும் கீழாக இருந்தால் அவர்களால் நம் கருத்துகளை ஏற்க முடியாமல் போகலாம்./அவர்களுக்கு புரிய வைக்க இயலாது. அவர்களிடம் எதிர் வாதம் செய்யாமலிருப்பது சாலச் சிறந்தது. அவர்களிடம் 'தம்' கட்டி விவாதிப்பதால் எந்த பயனுமில்லை.

அரசியலில் இன்று கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அடக்கு முறைகளைப்  பார்க்கின்றோம். இது மிகத் தவறான அணுகுமுறை. இன்று இணையத்தில் எத்தனையோ பேர் தங்களது கருத்துகளையும், காமெண்டுகளையும் பதிவிடுகின்றனர். அது அவர்களது உரிமை. சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு அவர்களை தண்டிக்க நினைப்பது மாபெரும் ஜனநாயக படு கொலை ஆகும்.

Post a Comment

 
Top