ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமானவன். மேலும் ஆணும் பெண்ணும் முற்றிலும்  வித்தியாசமாக சிந்திப்பவர்கள். ஆணின் விருப்பங்கள் வேறு. அவனது  முக்கியமான விஷயங்கள் வேறு. பெண் வேறு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாள். கணவனும் மனைவியும் உடலால் மட்டுமின்றி உள்ளத்தாலும், எண்ணங்களாலும் வேறு படுவார்கள். அதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது சகஜமே. ஆனால் அது சண்டையில் முடிய வேண்டிய அவசியமில்லை. கணவனும் மனைவியும் சண்டையிடுவது ஏன்? மேலே படியுங்கள்......



திருமணமான புதிதில் காமம் பூரணமாக ஆட்சி புரியும் போது கணவனது குறைகள் மனைவிக்கும், மனைவியின் குறைகள் கணவனுக்கும் தெரிவதேயில்லை.  ஆனால் மோகம் தெளிந்த பின்? கணவனும் மனைவியும் அதிக நேரம் ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கும் பொழுது கணவனுக்குப் பிடிக்காத விஷயங்கள் மனைவி பண்ணுவதற்கும், மனைவிக்குப் பிடிக்காத விஷயங்கள் கணவன் பண்ணுவதற்கும் நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஒருவருக்கு ஏ .ஸி (A.C) போடுவது பிடிக்கும். மற்றொருவருக்கு அது சுத்தமாக ஒத்துக் கொள்ளாது. ஒருவருக்கு ஜாலியாக செலவு செய்ய பிடிக்கும். மற்றவருக்கு அனாவசிய செலவுகள் அறவே பிடிக்காது. ஒருவருக்கு ரஜினி, மற்றொருவருக்கு கமல். அஜித்-விஜய், தி.மு.க-அ .தி.மு.க, சைவம்-அசைவம், இப்படி எத்தனையோ வேறுபாடுகள்! டி.வி. ரிமோட்  கூட பெரிய சண்டைக்கு வித்தாகலாம் சாமி.

கல்யாணம் பண்ணும்போதே ஓரளவுக்கு இருவரின் முக்கியமான எண்ணங்கள் ஒத்துப் போகிறதா என்று பார்த்து திருமணம் செய்வது சாலச் சிறந்தது. எல்லா எண்ணங்களும் நிச்சயம் ஒத்துப் போகாது. முக்கியமான விஷயங்களில் இருவருக்கும் ஒருமித்த கருத்து இருந்தால் அது மிகவும் நல்லது. 

ஈகோ தான் பெரும்பாலும் கணவன் மனைவி சண்டைக்கு முக்கியக்   காரணமாக இருக்கிறது. நாம் நம் குழந்தைகள் எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் அவர்களை எளிதில் மன்னித்து விடுகிறோம். ஆனால் அதையே கணவனோ அல்லது மனைவியோ செய்தால் நாம் மறப்பதுமில்லை, மன்னிப்பதுமில்லை என்பது தான் நிஜம். கட்டிய கணவனுக்கும் மனைவிக்கும் இடையே எதற்கைய்யா இந்த பாழாய்ப்போன ஈகோ?

அது சரி, கணவனும் மனைவியும் ஒற்றுமையாய் வாழ்வது எப்படி? திருமணம் பண்ணும்போதே முக்கியமான மனப் பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து கல்யாணம் பண்ணுங்கள். கணவனையோ அல்லது மனைவியையோ எந்தவித நிபந்தனையுமின்றி காதலியுங்கள். உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் அதிகம் எதிர்பார்க்காதீர்கள். எந்த அளவுக்கு உங்கள் எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கின்றதோ அந்த அளவுக்கு உங்கள் இல்வாழ்க்கை சிறக்கும் என்பது உறுதி. 'ஈகோ' வைத் தூக்கி வங்காள விரிகுடாவில் எறியுங்கள். குறைகள் இல்லாத மனிதன் உலகின் எந்த மூலையிலும் இல்லை என்பதை உணருங்கள். உங்கள் துணையின் குறைகளை பொறுத்துக் கொள்ள பழகுங்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கணவனை அல்லது மனைவியை நேசித்தால் அவர்கள் குறைகள் கூட அழகாகத் தெரியும் என்பது நிஜம். உங்கள் துணைவரை மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அது தற்கொலைக்கு சமம். எவ்வளவு சண்டைகள் இருந்தாலும் இல்லற இன்பத்திற்கு மட்டும் 144 போட்டு விடாதீர்கள்.

திருமணம் செய்யும்போதே அவர்களால் என்னென்ன நன்மைகள், சந்தோஷங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்து திருமணம் செய்யாதீர்கள். காலம் முழுவதும் நம்முடன் இருப்பவருக்கு என்னென்ன கொடுக்கலாம் என்று நினைத்து திருமணம் செய்யுங்கள். திருமணம் என்பது இரு உடல்கள் மற்றும் இரு மனங்கள் ஒன்றாக இணைவதற்குச் செய்யும் புனித ஒப்பந்தம். இதில் எந்த நிர்பந்தத்திற்கும் இடமிருக்கக் கூடாது. எதைப் பெறலாம் என்று எதிர்பார்த்து திருமணம் செய்யாதீர்கள். என்ன கொடுக்கலாம் என்று நினைத்து திருமணம் செய்யுங்கள். 

வாழ்க வளமுடன்!

ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியுமா?

சுக்கிரன் ஆண்களையும் பெண்களையும் படுத்தும் பாடு 

Post a Comment

 
Top