இந்த தலைப்பில் ஒரு விசேஷம்  இருக்கின்றது. அதாவது, இந்த தலைப்பு ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிப்போருக்கும் பொருந்தும். எதிர்ப்போருக்கும் பொருந்தும் என்பது தான்.



ரஜினி என்ன செய்தார்? எந்த பிரச்சினைக்கு குரல் கொடுத்தார்? ஜல்லிக்கட்டுக்கு என்ன செய்தார்? நெடுவாசலுக்கு என்ன செய்தார்? மீனவர் பிரச்சினை, முல்லை பெரியார், கட்சத்  தீவு என்று நீட்டிக் கொண்டே செல்வார்கள் ஒரு சில ரஜினி எதிர்ப்பாளர்கள். அவர் சம்பாதித்ததை ஏன் மக்களுக்குக் கொடுக்க வில்லை என்று கேட்பவர்களும் உண்டு.

அரசியலுக்கு வருபவர் எல்லாம் பல போராட்டங்களில்  கலந்து கொண்டு சிறைக்கு எல்லாம் சென்று, தியாகங்கள் எல்லாம் பல செய்த பின் தான் வர வேண்டும் என்று எந்த சட்டத்தில் இருக்கிறது? ராஜிவ் காந்தி நேரடியாக அரசியலுக்கு வர வில்லையா? ஓரளவுக்கு திறம்பட ஆள  வில்லையா? மணிரத்னம் நேரிடையாக இயக்குனராகி சிறந்த படைப்புகளைக் கொடுக்க வில்லையா?

ரஜினிகாந்த்தால் மட்டும் தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும் என்று சொல்லவரவில்லை. அவரிடமும் நிறையக்  குறைகள் உள்ளன. முடிவு எடுப்பதில் தயக்கம், யாரையும் புண் படுத்தக் கூடாது என்னும் நினைப்பு, உடல் நலக் குறைவு, அரசியல் அனுபவமின்மை போன்றவை அவரது குறைகள். நல்ல மனிதர் என்கின்ற பிம்பம், கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பு, ஆன்மிக பலம் போன்றவை அவரது  நிறைகள் எனலாம்.

அவர் சிறந்த நிர்வாகியாக இல்லாமல் இருக்கலாம். சிறந்த அறிவாளியாக இல்லாமலிருக்கலாம். ஆனால், அவர் இன்றைய அரசியவாதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நல்ல மனிதராகத் தெரிகின்றார்.

இன்றும், தமிழகத்தின்  ஏதோ ஒரு மூலையில்,  இன்றைய தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து போராடிக் கொண்டு ஒருவர் இருக்கலாம். ஆனால் அவரை நம்மால் ஆட்சியில் அமர்த்த முடியாதே. அவருக்கு மக்கள் செல்வாக்கு இல்லையே.

ஆக, இன்றைய நிலைமையில், மக்கள் செல்வாக்குப் பெற்ற  நல்ல மனிதரான ரஜினிக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்க்கலாம் என்பதே எனது தாழ்மையான கருத்து  ஆகும்.

வாழ்க தமிழ்! வெல்க தமிழகம்!

 நேர்மையானவர்கள் இன்று இருக்கிறார்களா?

நம்பிக்கை தான் வாழ்க்கை 

Post a Comment

 
Top