சமூக வலைத்தளங்கலில் இன்று மக்கள் குறிப்பாக இளைஞர்கள்  அதிக நேரத்தை செலவழிக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்ததே. இன்று இணைய தளம் என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது. இணைய தளத்தில் எத்தனையோ நல்ல விஷயங்களும் உள்ளன. நாம் இளைஞர்களை இணைய தளத்தில் நேரம் செலவிடக் கூடாது என்று சொல்ல முடியாது. இன்று பள்ளிப் பிள்ளைகளுக்கே இணையதளத்தில் தகவல்களைத்  திரட்ட ஆசிரியர்களே அனுமதி அளிக்கத் தொடங்கி விட்டனர். அப்படி  இருக்கும் போது  இளைஞர்களை  இணைய தளத்தை  பயன்படுத்தக் கூடாது என்று நாம் சொல்ல இயலாது.

நேரம் பொன்னானது. இன்று வாழ்க்கை மிகவும் கடினமாகி விட்டது. எந்த துறையிலும்  கடுமையான போட்டி நிலவுகிறது. அப்படி இருக்கும் போது நேரத்தை வீணடிக்கும் இளைஞன் போட்டியில் பின் தள்ளப் படுவான் என்பது உறுதி. சமுகவலைத் தளங்களில் சிறிது நேரம் பொழுது போக்கிற்காக  செல்வது ஒன்றும் தெய்வ குத்தமில்லை. ஆனால் நாள் பூராவும் அங்கேயே பழியாய் கிடந்தால் நிச்சயம் அவர்களின்  பொன்னான நேரம் வீணாகிப் போகும் என்பது நிஜம்.

சிறிது காலம் சிலர் அங்கே நேரத்தை வீணடித்து விட்டு பின் 'போர்' அடித்து விடுவதால் தொழிலில் கவனத்தை செலுத்தி விடுவர். அதனால் பிள்ளைகளை அதிகம் கண்டிக்க வேண்டியதில்லை. செய்யாதே என்றால் தான் அதை செய்ய இளைஞர்கள் அடம் பிடிப்பார்கள். அதற்கு பதில் நேரத்தின் முக்கியத்துவத்தையும், இன்று நிலவும் அதீதமான போட்டிகளையும் புரியவைக்கலாம். அதுவும் பெற்றோர்கள் அதை சொல்லுவதற்கு பதிலாக அவர்களுக்கு நெருங்கியவர்கள் மூலம் இதை சொன்னால் நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

24 மணி நேரமும் படிக்க வேண்டும் அல்லது உழைக்க வேண்டும் என்று  சொல்ல மாட்டேன். கடுமையாக உழைத்த பின் சிறிது நேரம் பொழுது போக்கிற்காக செலவிடலாம் தப்பில்லை. அது மீண்டும் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய பெரிதும் உதவும். 

மேலும் Face book, LinkedIn  போன்ற முக்கிய சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் நல்ல வேலையைத் தேடிக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது  என்பதை மறுக்க இயலாது.எத்தனையோ நல்ல விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ளவும் முடியும். எத்தனையோ வியாபாரத் தலங்கள் தங்கள் வியாபாரத்தைப்  பெருக்குவதற்கு  'Facebook' ஐ பயன் படுத்துகின்றனர்.

சமூக வலைத்தளங்கள் என்பது ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் கையில் இருக்கும் கத்தி போன்றது. அது ஒரு உயிரைக் காப்பாற்றலாம். அல்லது ஒருகொலை காரன் கையில் அது  கிடைத்தால் ஒரு உயிரை எடுக்கவும் பயன்படும். 

சமூக வலைத் தளங்களை நாம் பல நல்ல விஷயங்களுக்காகப்  பயன்படுத்தலாம். ஆனால் வெறும் பொழுபோக்கிற்காகவே அதிக நேரம் அங்கு செலவிடுவது தவறு என்றே நினைக்கின்றேன். அதுவும் இளைஞர்கள் அங்கு நேரத்தை வீணடிப்பது
பிற்காலத்தில் அவர்களுக்குப் பெருத்த நஷ்டத்தை  ஏற்படுத்தும் என்பது நிஜம்.

வாழ்க வளமுடன்!

பெண்கள் அழகாய் இருப்பது ஆபத்தா?

தாழ்வு மனப்பான்மையை விட்டு விடுங்கள் 

Post a Comment

 
Top