சில தலைப்புகள் முடிவில்லா விவாதங்களில் சென்று முடியும். அப்படிப்பட்ட ஒரு தலைப்பு தான் 'ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியுமா?' என்பதும்  ஆகும். ஒரு சிலர் ஆணும் பெண்ணும் தாராளமாக வெறும் நண்பர்களாக இருக்க முடியும் என்று  சொல்லுவர். பலர், 'நண்பர்களாக வேண்டுமானால் இருக்க முடியும், ஆனால் நெருங்கிய நண்பர்களாக இருத்தல் சாத்தியமாகாது என்பர். உண்மையில் ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியுமா? மேலே படியுங்கள்.......


இன்றைய வாழ்க்கை முறைகளில் ஆண்  பெண் நட்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. இன்று ஒரு ஆண் தன காதலி அல்லது மனைவி தவிர வேறு பெண்களோடு பழகுவதும், ஒரு பெண் தன காதலன் அல்லது கணவன் தவிர பிற ஆண்களுடன் பழகுவதும் சகஜமானதாகவும், தவிர்க்க முடியாததாகவும் ஆகி விட்டது என்றே சொல்ல வேண்டும். ஒரு ஆணும் பெண்ணும் சாதாரண நண்பர்களாக பழகும் போது பிரச்சனை வராமலிருக்கலாம். ஆனால் நெருங்கி பழகும் போது? ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள உடல் கவர்ச்சி என்பது எளிதில் கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகும். முனிவர்களும் கூட உடல் கவர்ச்சியில் மயங்கி இருக்கின்றனர்  என்கின்றபோது நீங்களும் நானும் எம்மாத்திரம்?

ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாகும் போது தொடும் ஆசை எழத்தானே செய்யும்? கட்டி அணைக்க தோன்றுவதும் இயல்பாக வரும் ஆசை தான். இருவரும் கல்யாணம் ஆகாதவர்களாக இருந்தால் நிச்சயம் காதலில் போய் முடியும் என்றே நினைக்கிறேன். இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே கல்யாணம் ஆகி இருந்தால் சிக்கல் தான்.

அமெரிக்கா  போன்ற மேலை நாடுகளில் ஆணும் பெண்ணும் வெறும் நண்பர்களாக சபலம் இல்லாமல் பழகுவது கொஞ்சம் எளிதாக இருக்கலாம். ஆனால் அவர்களும் தனிமையில் நீண்ட நேரம் இருக்க நேர்ந்தால், இருவரில் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமே மற்றவரின் ஆறுதலும் அரவணைப்பும் தேவைப்பட்டால் நட்பு என்பது எல்லை மீறி காதலாகி விடும் அபாயம் நிச்சயம் உண்டு என்றே தோன்றுகிறது.

ஆண்  பெண் இனக்கவர்ச்சி என்பது இயல்பான ஒன்று. அதைக் கட்டுப்படுத்துவது என்பது நிச்சயம் சிரமமான விஷயம் தான். ஆணும் பெண்ணும் சாதரணமான நண்பர்களாக இருந்து விட்டால் பிரச்சினை அதிகம் வராது. அவர்கள் இருவரும் மனக் கட்டுப்பாடு கொண்டிருக்க வேண்டும். இருவரும் ஒரு எல்லைக் கோட்டை வகுத்துக்கொண்டு அதைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்  தான் கணவனின் அன்பு மனைவிக்கும், மனைவியின் அன்பு கணவனுக்கும் பரிபூரணமாக கிடைக்கும்.

நாம் கற்பு விஷயத்திலும் ஆண் பெண் உறவு நட்பு விஷயங்களிலும் மிகவும் போலித்தனமாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம் என்பது தான் கசப்பான நிஜம்.  ஒவ்வொருவரின் மனதில் உள்ள ஆசைகளையும், இரகசியங்களையும்  கடவுள் ஒருவரே அறிவார். ஒரு நாள் மட்டும் கடவுள் ஆண்  நினைப்பதை பெண்ணும், பெண்  நினைப்பதை ஆணும் அறியும் சக்தியைக்  கொடுத்தால் இரு பாலரும் பெரும் அதிர்ச்சி அடைவர் என்பது சர்வ நிச்சயம்.

ஒரு ஆணும் பெண்ணும் நெருங்கிய நண்பர்களாக இருக்க முடியுமா? சாதரணமான நண்பர்களாக இருப்பது ஓரளவு சாத்தியம் தான். ஆனால் நெருங்கிய நண்பர்களாக இருத்தல் மிகவும் அசாத்தியமானதாகவே கருதுகிறேன். மனக்கட்டுப்பாடும், எல்லை மீறி எதிரினத்தாரோடுநெருங்கி பழகாதிருத்தலும் மிகவும் அவசியம் என்றே நினைக்கின்றேன்.

வாழ்க வளமுடன்!

திருமண உறவைக் கொல்லும் அகங்காரம்

வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?

Post a Comment

 
Top