ஜோதிடத்தில் அதீத நம்பிக்கை உள்ளவர்கள் வருடா வருடம் தவறாமல் பிரபல ஜோதிடர்கள் எழுதும் குரு பெயர்ச்சி பலன்களை படித்து வருகின்றனர். ஏன், ஜோதிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை இல்லாதவர்கள் கூட ,"அட நம் ராசிக்கு என்ன தான் பலன் கணித்திருக்கின்றார்கள்" என்று தெரிந்து கொள்ள ஆவல் காட்டுகின்றார்கள் என்பது தான் உண்மை.. இதில் உள்ள ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால் பல்வேறு ஜோதிடர்கள் பலவிதமான பலன்களை கணிக்கின்றனர் என்பது தான். அதாவது ஒரு ஜோதிடர் மேஷ ராசிக்கு குரு பெயர்ச்சி நல்லது செய்யும் என்பார். பிறிதொரு ஜோதிடர் கெடுபலன்களை கணிப்பார். ஏனிந்த குளறுபடிகள்?  குரு பெயர்ச்சி பலன்கள் ஜோதிடருக்கு ஜோதிடர் மாறுவது ஏன்? மேலே படியுங்கள்.....



பொதுவாக குரு கோட்சாரத்தில் ராசிக்கு 2, 5, 7, 9 மற்றும் 11 ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் போது தான் நல்ல பலன்களை கொடுப்பார். இதன் படி, சில ஜோதிடர்கள் சிம்மம், ரிஷபம், மீனம், கும்பம் மற்றும் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை கணித்துக் கூறியிருப்பார்கள். 

வேறு சில ஜோதிடர்கள், குரு நிற்கும் ஸ்தானத்தை விட அது பார்க்கும் வீடுகளுக்கு தான் நல்ல பலன்கள் நடக்கும் என்பார்கள். அதன்படி பார்த்தால், மகரம், மீனம் மற்றும் ரிஷபம் ராசிக்காரர்கள் நல்ல  பலன்களை பெறுவார்கள் எனலாம். ஒரு சில ஜோதிடர்கள் உங்கள் ராசிக்கு எந்தெந்த வீடுகள் குருவால் இவ்வருடம் பார்க்கப் படுகின்றனவோ அந்த வீடுகள் எல்லாம் நல்ல பலன்களை பெறும் என்பார்கள். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் , துலாம் ராசிக்கு குரு 4, 6, மற்றும் 8 வீடுகளை பார்க்கின்றார். ஆகையால் அவ்வீடுகள் குறிக்கும் வண்டி வாகன சேர்க்கை, குடும்பத்தில் சுகம், பகைவர் வெற்றி, கோர்ட் வழக்குகளில் வெற்றி, தாயார் சுகம், வீடு வாங்குதல் போன்ற நல்ல பலன்களை கணிப்பார்கள்.

சில ஜோதிடர்கள், குரு தன் ஜென்ம சத்துருவான சுக்கிரன் ராசிகளான துலாம், ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 1, 3, 4, 6, 8, 10, 12 போன்ற கெட்ட இடங்களில் இருக்கும் போது தான் நல்ல பலன்களை அளிப்பார் என்பார்கள். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்று விளக்கமும் அளிப்பார்கள்.

உண்மை என்னவென்றால், குரு நல்ல வீடுகளில் இருக்கும் போது தான் நல்ல பலன்களை அளிப்பார். ஆனால், தனக்கு பிடிக்காத ரிஷபம், துலாம், போன்ற ராசிக்காரர்களுக்கு தான் நல்ல இடத்தில் இருக்கும் போதும்  நன்மைகளை  சற்று குறைவாகத் தான் செய்வார்-மாற்றாந்தாய் தன் குழந்தைக்கு நல்ல உணவை அளித்து விட்டு பின், மீந்து போன உணவை தான் பெறாத பிள்ளைக்கு  அளிப்பது போல் என்று சொல்லலாம். அதே குரு, அவர்களுக்கு 1, 3, 4, 6, 8, 10, 12 வீடுகளில் சஞ்சரிக்கும் போது கெடு பலன்களை அதிகம் விளைவிக்க முடியாதவராகின்றார் என்பதும் நிஜம்.

பொதுவாகவே இன்று எல்லா ராசிகளுக்கும் நல்ல பலன்களை எழுதும் ஜோதிடர்கள் தான் அதிகம் இருக்கின்றனர். காசு கொடுத்து வாங்கும் வாசகனுக்கு நல்ல பலன்களை சொல்லுவது தான் அவர்களது நீதியாக இருக்கும்.

ஆகையால் இந்த வருட குரு பெயர்ச்சி, ரிஷபம், சிம்மம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அதிக நன்மைகளும், மற்ற ராசிக்காரர்களுக்கு, குறைந்த நன்மைகளும், குறைந்த கெடுதல்களையும்  கொடுப்பார்  என்று புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க வளமுடன்!

2016 குரு பெயர்ச்சி பலன்கள் 

15 எளிய வாஸ்து பரிகாரங்கள் 

(குரு பெயர்ச்சி பலன்கள் ஒவ்வொரு ராசிக்கும் வரும் பதிவுகளில் படித்து மகிழுங்கள்)


Post a Comment

 
Top