வாழ்க்கையில் தவறுகள் செய்வது சகஜம் தான். தவறு செய்யாதவர்  யாரும் இல்லை இந்த உலகில் என்பது உண்மையே. தவறு செய்தவர்களை மன்னிப்பது என்பது ஒரு நல்ல பண்பு என்பதும் நிஜம் தான். ஆனால் எல்லா தவறுகளையும் ஒருவரால் மன்னிக்க முடியுமா? ஒரு சில தவறுகள் மன்னிக்க முடியாதவைகளாக இருக்கின்றனவா? மன்னிக்க முடியாத தவறுகள் எவை எவை? மேலே படியுங்கள்..............


தினம் தினம் நாம் எல்லோரும் பல தவறுகளை தெரிந்தோ தெரியாமலோ செய்து கொண்டே தான் இருக்கிறோம். இங்கே நான் தவறு என்று குறிப்பிடுவது பெரும்பாலனோரால் தவறு என்று கருதப் படுபவைகளையே. ஏனென்றால் எனக்கு தவறாகத் தெரியும் சில விஷயங்கள் வேறொருவருக்கு சரியாக தெரியலாம் அல்லவா? கொலை செய்பவனும் அவனைப் பொறுத்த மட்டில் அது சரியாகத் தெரிவதால் தான் கொலை செய்கின்றான். ஆனால் சில தவறுகளை  பொதுவாக   நம்மில் பலரால் மன்னிக்க முடிவதில்லை. எந்த மாதிரியான தவறுகளை நம்மால் மன்னிக்க முடிவதில்லை?

கணவனோ அல்லது மனைவியோ துரோகம் செய்தால் மன்னிப்பது எளிதல்ல. அதுவும் அந்த கணவனோ  மனைவியோ தமிழனாய் இருந்தால் இன்னும் சிரமம் என்றே சொல்ல வேண்டும். அனுதினமும் குடித்து விட்டு கூத்தடிக்கும் கணவனை மன்னிக்கும் பெண்கள் இன்று மிக சிலரே உள்ளனர். கொஞ்சமும் பொறுப்பே இல்லாமல் பெருத்த பொருள் அல்லது பண நஷ்டங்களை ஏற்படுத்துபவர்களை குடும்பத்தினரே மன்னிப்பது அரிது.

முதுகில் குத்துபவர்கள், காட்டிக் கொடுப்பவர்கள், காதல் விவகாரங்களில் குறுக்கிட்டவர்களையும் மன்னிப்பது எளிதல்ல என்றே நினைக்கின்றேன். தன் வீட்டு பெண்களிடம் தவறாக நடந்தவர்களை நிறைய ஆண்களால் மன்னிக்க முடியாது.

பாலியல் பலாத்காரம் பண்ணுபவர்களை நாம் நேரிடையாக பாதிக்கப் படாவிட்டாலும் நம்மால் மன்னிக்க இயலாது. தேச துரோகிகளை எப்படி மன்னிக்க முடியும்?

அடுத்தவர்களைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் செயலாற்றும் அற்பர்கள், சோம்பேறிகள், வன்முறையாளர்கள் -இவர்களை  மன்னிக்க முடியுமா?

எல்லாவற்றிற்கும் மேலாக, செய்த தவறை சற்றும் உணராமல் மேலும் மேலும் அந்த தவறை கொஞ்சமும் கவலை இல்லாமல் செய்யும் வீணர்களை மன்னிக்கவே இயலாது. 

தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பன் மனிதன். அவனை மன்னிப்பவன் கடவுள். நான் வெறும் மனிதன் தான். கடவுளின் நிலை அடையும் வரை என்னால் துரோகிகளை மன்னிக்கவே முடியாது. 

ரொம்ப நல்லவராக இருப்பது சரியா?

சகிக்க முடியாத 7 நபர்கள் 


Post a Comment

 
Top