குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அது எந்த நாட்டுப் பெண்கள் என்பதை பொருத்தும் இருக்கிறது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் நம் தமிழ் நாட்டுப் பெண்கள் பற்றி மட்டும் பார்ப்போமே. மேலே படியுங்கள்....



கணவன் மனைவி உறவு சிறக்க வேண்டுமென்றால், குடும்பம் விளங்க வேண்டுமென்றால், விட்டுக் கொடுத்தல் மிகவும் அவசியம் ஆகும். இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தல் சிறப்பு ஆகும். குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்களா? அல்லது ஆண்களா? பல குடும்பங்களில் பெண்கள் தான் அதிகம் விட்டுக் கொடுப்பார்கள். சில குடும்பங்களில் ஆண்கள் அதிகம் விட்டுக் கொடுப்பதையும் நாம் பார்க்கிறோம்.

கணவனுக்கும் மனைவிக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம். இருவரும் வெவேறு சூழ் நிலைகளில் வளர்ந்து இணைந்தவர்கள் என்பதை மறக்கலாகாது. ஆணின் சிந்தனைகளும், முக்கியத்துவங்களும் வேறு. பெண்ணின் எண்ணங்களும் முக்கியத்துவங்களும் வேறு. அதனால் சண்டைகளும், கருத்து வேறுபாடுகளும் தவிர்க்க முடியாதவை என்பதை இரு பாலரும் உணர வேண்டும்.

பெண்கள் ஏன் அதிகம் விட்டுக் கொடுக்கிறார்கள்?  இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பெண்கள் அதுவும் தமிழ் பெண்கள் இயல்பாகவே மிகவும்  பொறுமைசாலிகள். கணவன் மீது உள்ள மரியாதையின் நிமித்தம் விட்டுக் கொடுக்கலாம். பெண்கள் திருமண பந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கு பங்கம் வந்து விடக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுக்கலாம். குழந்தைகளுக்காக விட்டுக் கொடுக்கலாம். பொருளாதார ரீதியாக கணவனை சார்ந்திருப்பதனால் விட்டுக் கொடுக்கலாம். ஊர் உலகத்திற்கு பயந்து விட்டுக் கொடுக்கலாம். எது எப்படியோ, பெண்கள் விட்டுக் கொடுத்து நம் எல்லா குடும்பங்களையும் உடையாமல் பார்த்துக் கொள்கிறார்கள் என்பது நிஜம். 

இப்பொழுது இந்த விட்டுக் கொடுத்தல் கொஞ்சம் குறைந்து வருகிறது என்பது உண்மை தான். பெண்கள் பொருளாதார ரீதியாக ஆண்களை சார்ந்திருப்பது குறைந்திருப்பதால் ஏற்படும் விளைவு தான் இது. 'ஈகோ' என்கின்ற 'பேய்' இப்பொழுது பெண்களையும்  பிடித்து ஆட்ட ஆரம்பித்து விட்டது தான் காரணம்.

விட்டுக் கொடுப்பது தான் சிறந்த இல்லறத்திற்கு முதுகெலும்பு ஆகும். அது ஒன்றும் கேவலமில்லை. மற்றவர்கள், ஒற்றுமையாய் இருக்கும் உங்களை அதுவும் இதுவும் சொல்லி கலைக்க முயலுவார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 'ஈகோ' வைத் தூக்கி வங்காள விரிகுடாவில் வீசுங்கள்.

குடும்பத்தில் அதிகம் விட்டுக் கொடுப்பது பெண்கள் தான் என்று நினைக்கின்றேன். குடும்பத்தில் விளக்காக அவர்கள் விளங்குகிறார்கள் என்பதை மறுக்க இயலாது. குடும்பத்தை கோவிலாக்குவதும் குப்பைமேடாக்குவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது.

வாழ்க வளமுடன்!

திருமண உறவை கொன்று விடும் அகங்காரம் 

உங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பது எப்படி?

Post a Comment

 
Top