மனிதன் தான் அன்புக்காக வெகுவாக ஏங்கும் உயிரினம் என்றால் அது மிகையாகாது. அன்பு கிடைக்காத வாழ்க்கை மிகவும் கொடுமையானது என்றே சொல்ல வேண்டும். இன்று துரதிர்ஷ்டவசமாக உண்மையான அன்பைக் காண்பதே அரிதாகி வருகிறது. பணத்திற்காகவோ அல்லது வேறு நன்மைகளுக்காகவோ போலியாக பலர் அன்பு செலுத்துவதை நாம் இன்று பார்க்கிறோம். உண்மையான அன்பு கிடைக்காவிட்டால் அல்லது நமக்கு கிடைக்கும் அன்பு போலியானால்....? மேலே படியுங்கள்......




இன்று உலகம் பொருள்  சார்ந்ததாக மாறிப் போய் விட்டது.  உங்களிடம் பணம் இல்லையென்றால் உங்கள் மீது உண்மையான அன்பு செலுத்துபவர் இல்லாமல் போய் விடுகின்றனர். நீங்கள் கேட்கலாம், உண்மையான அன்பு செலுத்துபவர் உங்களிடம் பணம் இல்லையென்றாலும் அன்பு செலுத்ததானே செய்வார் என்று. யதார்த்தம் என்னவென்றால் பணம் இல்லையென்றால் உங்கள் மனைவி கூட உங்களை மதிக்க மாட்டார். அவருக்கு உங்கள் மீதுள்ள அன்பு பலவீனப் பட்டு விடும் என்பது தான் நிஜம்.

பதவியில் இருந்தால் உங்கள்  மீது போலியான அன்பு காட்டுவார்கள். உங்களிடம் ஏதோ ஒரு காரியம் ஆக வேண்டியிருந்தால் போலியான அன்பை பொழிவார்கள்.  உலகம் காசுக்கும், பதவிக்கும், புகழுக்கும்  அதிக முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. 

உங்கள் மீது உண்மையான் அன்பு செய்பவர்களை மதியுங்கள். அவர்களை  உங்கள் அன்பால் குளிப்பாட்டுங்கள். அதைத் தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.

அப்படி என்றால் உண்மையான அன்பே இந்த உலகில் இல்லையா? தாய் பிள்ளைகளிடம் காட்டும் அன்பு தான் முதன்மையான, உண்மையான,
 கலப்படம் இல்லாத அக்மார்க்  அன்பு என்று நான் நினைக்கின்றேன். அடுத்ததாக, தந்தை குழந்தைகளிடம் காட்டும் அன்பை சொல்லலாம். அபூர்வமாக தந்தையின் அன்பு தாயின் அன்பை மிஞ்சுவது உண்டு. எனது தந்தையின் அன்பு என் தாயின் அன்பை விட சற்று அதிகம், என்றே சொல்லுவேன். மொத்தத்தில் பெற்றோர்களின் அன்பே போலித்தனம் இல்லாத உண்மையான அன்பு ஆகும்.

வரும் தலைமுறைகளில் அந்த அன்புக்கும் பங்கம் வந்து விடக் கூடாது என்பதே என்னுடைய கவலை. அன்பு போலியானால் வாழ்வே வீணாகிப் போகும் என்பது நிஜம். அன்பு இல்லாத வாழ்க்கை என்பது உயிர் இல்லாத உடலுக்கு சமம் என்று சொல்லி முடிக்கிறேன்.

வாழ்க வளமுடன்!


Post a Comment

 
Top