ஆங்கிலேயர்கள் நம்மை பல நூற்றாண்டுகள் அடிமைப்படுத்தி வைத்தாலும் வைத்தார்கள், நமது கலாச்சாரம் மாறித்தான் போய் விட்டது. மேலும்,  இப்பொழுது இந்தியர்கள் அதிக அளவில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு போவதால் மேற்கத்திய பாதிப்பு என்றுமில்லாத அளவுக்கு இன்று இந்தியர்களுக்கு ஏற்பட்டு விட்டது எனலாம்.


நமது நாகரிகம் மாறியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். உடை விஷயத்தில் மட்டுமில்லாமல், உணவு  விஷயத்திலும் நாம் வெகுவாகவே மாறிப்போயிருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. இட்லியையும், இடியாப்பத்தையும் இன்று இளைஞர்கள் புறக்கணித்து விட்டு பிட்சாவுக்கும் பெர்கருக்கும் மாறி விட்டார்கள். 


ஆஸ்திரேலியாவிலிருந்து கிவி பழம் மற்றும் பல நாடுகளிலிருந்து பலவிதமான பழங்களை இறக்குமதி செய்து அதிக விலைக் கொடுத்து நாம் சாப்பிட ஆரம்பித்து விட்டோம். உண்மையில், நம்முடைய நெல்லிக்கனி, கொய்யா, வேர்கடலை, சீதாப்பழம், தேங்காய்  போன்றவற்றில் மிகவும்  அதிகமான சத்துக்கள்  குவிந்து கிடக்கின்றன. எளிதாய் மற்றும் மலிவாய் கிடைப்பவை எல்லாம் பயனற்றவை, சத்தில்லாதவை என்ற ஒரு தப்பான அபிப்ராயம் நம்மிடையே உள்ளது.

நாம் ஏன் வெளி நாட்டிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்து சாப்பிட வேண்டும்? இயற்கை நாம் வாழும் பகுதிக்கேற்ப பழங்களையும், காய்கறிகளையும் தருகிறது. அவற்றை உண்டால் தான் நாம் முழு ஆரோக்கியத்துடன் வாழலாம். அங்குள்ள பழங்கள் அவர்கள் சாப்பிட தகுந்தவையேயன்றி நாம் சாப்பிட அல்ல என்பதை நாம் உணர வேண்டும்.

சிகரெட் பிடிப்பது நம் சீதோஷ்ண நிலைக்குத் தேவையா? மது அருந்துவது நம் நாட்டிற்குத் தேவையே இல்லை. ஷூ போடுவதும், கோட் அணிவதும் நம் தட்பவெப்ப நிலைக்கு உகந்ததல்ல. ஜீன்ஸ் அணிவதும் தேவை இல்லை என்றே நினைக்கின்றேன்.

இனிமையான் இந்திய இசை இருக்கும்போது பாப் மியூசிக் தேவை தானா? அவற்றை நாம் என்றாவது ஒரு நாள் கேட்கலாம், தப்பில்லை. ஆனால் தினசரி காது கிழியும் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் மியூசிக் தேவைதானா என்பது தான் என் கேள்வி. வளர்ந்து வரும் 'பப்' மற்றும் ' பார்' கலாச்சாரம் தேவைதானா?

விவாக ரத்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பொருளாதாரம் வளர்ந்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் நாம் அதற்கு கொடுக்கும் விலை சற்று அதிகமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

குடும்பகளிலில் அன்பு குறைகின்றதோ என்ற அச்சம் எழுகின்றது. கணவனும், மனைவியும் , இன்று  வீட்டுக்குள்ளேயே அலைபேசியில் பேசிக்கொள்ளும் அவலம் வந்து விட்டது. இருவரும் லேப்டாப்பை கட்டிப் பிடித்துக் கொண்டு  வலைதளத்தில் மூழ்கி விடுகிறார்கள். 

முதியோர் இல்லங்கள் அதிகரித்து வருகின்றன. பெரியவர்களை இளைஞர்கள் மதிப்பது குறைந்து வருகிறது.குடும்பங்களில் நிம்மதி குறைந்து வருகிறது. வசதிகள் பெருகி விட்டன. ஆனால் வாழ்க்கை தொலைந்து போய்க்  கொண்டிருக்கிறது என்பது நிஜம்.

அமெரிக்கர்கள், ஒற்றுமையாய் வாழும் இந்திய தம்பதிகளைப் போல் வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். மறு பிறப்பை நம்ப ஆரம்பித்து விட்டனர். யோகாவும், தியானமும் விரும்பி கற்றுக் கொள்கின்றனர். ஆனால் நாமோ?

இந்த மேற்கத்திய மோகமும் ஒரு நாள் நிச்சயம் நம்மை விட்டுப் போகும். நம் கலாச்சாரம் மீண்டும் இங்கே ஆதிக்கம் செலுத்தும் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது. மேற்கத்திய கலாச்சாரம் முற்றிலும் தவறென்று நான் கூறவில்லை. நிச்சயம் அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை நாம் அவர்களிடமிருந்து கண்டிப்பாக கற்றுக் கொள்ளலாம். நமக்கு தேவை இல்லாத நமக்கு முற்றிலும் ஒத்துப் போகாத விஷயங்களைத தான் நாம் கற்றுக் கொள்ளக் கூடாது என்கிறோம்.

வாழ்க வளமுடன்!

உங்களை நீங்களே கொண்டாடிக் கொள்ளுங்கள்  

கற்பு என்னும் ஒரு மாயை 





Post a Comment

 
Top