திருமணமும் ஜோதிடமும் இன்று உயிரும் உடலும் போல் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து உள்ளதைப் பார்க்கும்போது நிஜமாகவே மிகவும் ஆச்சிரியமாக உள்ளது. தெரிந்தோ, தெரியாமலோ இன்று ஜோதிடம் திருமணத்தை நடத்தவோ அல்லது நிறுத்தவோ அதிகாரம் கொண்டு விட்டது. எத்தனை திருமணங்கள் இன்று ஜோதிடத்தால் நடக்காமல் போகின்றன என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் புலப்படும்.


திருமணம் பொருத்தம் பார்ப்பது என்பது கேலிக்கூத்தாகி வருகிறது இன்று. ஜோதிடர்கள் எத்தனையோ திருமணங்கள் நடக்காமல் போவதற்கும் அல்லது மிகவும் தள்ளி போவதற்கும் காரணமாகிறார்கள். நட்சத்திர பொருத்தம் இல்லை என்பார்கள். இதுவாவது பரவாயில்லை. ஒரு சில ஜோதிடர்கள் செவ்வாய் தோஷம் இருக்கிறது,  ராகு கேது தோஷம் இருக்கிறது என்று  நடக்க வேண்டிய  பல திருமணங்களை போகிற போக்கில் சொடுக்கு போடும் நேரத்தில்  நிறுத்தி விடுகிறார்கள்.

செவ்வாய் தோஷம் மற்றும் ராகு கேது தோஷம் இல்லாத ஜாதகம் எங்கே இருக்கிறது? செவ்வாய் லக்கினத்திலிருந்து ஒன்றில் இருந்தால் செவ்வாய் தோஷம். அது இரண்டில் இருந்தாலும், நான்கில் இருந்தாலும், ஏழில் இருந்தாலும், எட்டில் இருந்தாலும், பன்னிரெண்டில் இருந்தாலும் தோஷம் தான். 

ராகு அல்லது  கேது ஒன்றில் இருந்தாலும், இரண்டில் இருந்தாலும், நான்கில் இருந்தாலும், ஐந்தில் இருந்தாலும், ஏழில் இருந்தாலும், எட்டில் இருந்தாலும், ஒன்பதில் இருந்தாலும், பன்னிரெண்டில் இருந்தாலும் தோஷம் தான். ராகு ஒன்றில் இருக்கும் போது கேது ஏழில் இருப்பார். ராகு மூன்றில் இருக்கும் போது கேது ஒன்பதில் இருப்பார்.  ஆக ராகு நல்ல இடத்தில் இருந்தால் நிச்சயம் கேது தோஷமான இடத்தில் தான் இருப்பார். அதே போல் கேது நல்ல இடத்தில் இருந்தால் நிச்சயம் ராகு தோஷமான இடத்தில் தான் இருப்பார். ராகு கேது  தோஷம் இல்லாத ஜாதகமே இல்லை என்று துணிந்து சத்தியம் செய்யலாம்.

இத்துடன் விடுகிறார்களா ஜோதிடர்கள்? தசா சந்தி வந்தால் திருமணம் பண்ணக் கூடாதாம். குரு பலம் இல்லை என்றால் திருமணம் பண்ணக் கூடாதாம். இரட்டைப் படை எண்ணில் வயது இருக்கும் போது கல்யாணம் பண்ணக்கூடாதாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உடையவன் நான். ஜோதிடத்தை ஆழமாக கற்றவர்களுள் அடியேனும் ஒருவன் தான். ஆனால் அரை குறை ஜோதிடர்களின் பிதற்றல்களை தேவ வாக்காக நினைத்துக் கொண்டு திருமண சம்பந்தங்களை வேண்டாம் என்பதும், திருமணத்தைத்  தள்ளிப் போடுவதும் வடிகட்டின முட்டாள்த்தனம் என்று அடித்து சொல்லுவேன்.

பஞ்சாங்கமே மூன்று உள்ளது. ஒவ்வொரு ஜோதிடரும் வித்தியாசமான பலன்களை கூறுகின்றனர். இதை நம்பி நல்ல சமபந்தங்களை வேண்டாம் என்று சொல்லும் படித்த முட்டாள்களைப்  பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.

கண்ணுக்குத்  தெரிந்து நல்ல மண மகன், நல்ல மண மகள் என்று தெரிந்தும் ஜோதிடர் சொன்னார் என்பதற்காக அவர்களை நிராகரிப்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

சில  நூறு ரூபாய்களை வாங்கி கொண்டு ஜோதிடர் போகிற போக்கில் உங்கள் வாழ்க்கையையே திசை திருப்பி விடுகின்றனர். ஜோதிடர்களுக்குக்  கட்டணம் கொடுத்து பல நஷ்டங்களை ஏற்படுத்திக் கொள்ளும் மக்களைப் பார்க்கும் போது சொந்த செலவில் சூனியம் வைப்பதும், வேலியில்  ஓடும் ஓணானை எடுத்து வேட்டியில் விடுவதும் தான் நினைவுக்கு வருகிறது.

ஜோதிடத்தை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இந்த வலைப் பதிவை நிறைவு செய்கிறேன்.

வாழ்க வளமுடன்!

கிரகங்களைப் பற்றிய சில சுவையான செய்திகள் 

வாஸ்து சாஸ்திரம் வேலை செய்யுமா?

Post a Comment

 
Top