நீங்கள் ஆத்ம துணை (Soul Mate) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உங்களில் பலர் ஆத்ம துணை என்று இல்லவே இல்லை என்றே சொல்லுவீர்கள். ஒரு சிலர் காதலிக்கும் போது அல்லது திருமணமான புதிதில் தங்களின் துணை ஆத்ம துணை என்றே நம்புகிறார்கள். ஆனால் ஒரு சில வருடங்களில் அவர்களும் ஆத்ம துணை என்று ஒன்று இல்லவே இல்லை அது வெறும் கட்டுக் கதை என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் அபூர்வமாக ஒரு சில ஜோடிகள் கடைசி வரை ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்து அதீத மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். அவர்கள் தான் ஆத்ம துணையின் உதாரணமாக இருக்கிறார்களோ? அது சரி, நீங்கள் உங்கள் ஆத்ம துணையுடன் (Soul Mate) தான் வாழ்கிறீர்களா? எப்படி கண்டுபிடிப்பது? மேலே படியுங்கள்......
நீங்கள் உங்கள் ஆத்ம துணையை முதல் முதலில் பார்க்கும் போதே உங்களின் உள்ளே ஏதோ ஒன்று இது தான் உன் ஆத்ம துணை என்று உங்களுக்கு உணர்த்தும் என்கிறார்கள். ஒவ்வொரு ஆத்மாவிற்கும் ஒரு ஆத்ம துணை இருக்கும் என்கிறார்கள். ஒரு ஆத்மா தனது ஆத்ம துணையை பார்த்தமாத்திரத்திலேயே உணர முடியும் என்கிறார்கள். அதனால் தான் முதல் முதலில் பார்த்த உடனேயே அவர்களை உங்களுக்கு சட்டென்று பிடித்து விடுகிறது. அவர்களை ஏற்கனவே உங்களுக்குத் தெரியும் என்பது போல் உணர்வீர்கள். அவர்களுடன் தான் நம் வாழ்க்கை அமையப் போகிறது என்று உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு பரிபூரணமாக உணர்த்துகிறது.
உங்கள் ஆத்ம துணையுடன் நீங்கள் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் உணர்வீர்கள். கொஞ்ச நாட்கள் கூட ஒருவருக்கொருவர் பார்க்காமல் இருக்க முடியாதது போல் உணர்வீர்கள். நிபந்தனையற்ற காதலாக இருக்கும் உங்களது காதல். ஒருவர் மற்றவருக்காகவே வாழ்வது போல் இருக்கும். இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் சந்தோஷப்படுத்த எல்லா தியாகங்களும் செய்வார்கள்.
இருவரும் ஒருவரை ஒருவர் பூர்த்தி செய்வர். அதாவது ஒருவரின் குறை மற்றவரின் நிறையாக இருக்கும். ஒருவர் நகைச்சுவையுடன் பேசுபவராக இருந்தால் மற்றவர் அதை இரசிக்கும் குணம் உடையவராக இருப்பார். ஒருவர் எல்லோரிடமும் சகஜமாக பேசி பழகுபவராக இருந்தால் மற்றவர் கொஞ்சம் கூச்ச சுபாவமாக இருக்கக் கூடும்.
ஒருவொருக்கொருவர் எளிதில் விட்டுக் கொடுப்பார்கள். இருவரும் மற்றவரின் குறைகளைப் பெரிது படுத்த மாட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் மற்றவரின் குறைகளை இரசிக்கவும் செய்வார்கள் என்றே சொல்ல வேண்டும். எளிதில் தங்கள் துணையை மன்னித்து விடுவார்கள். என்றுமே அவர்கள் இல்லற சுகத்தை மற்றவருக்கு வாரி வாரி வஞ்சகமே இல்லாமல் வழங்குவார்கள். அவர்களுடல்கள் மட்டுமல்ல அவர்கள் ஆத்மாக்களும் கலந்து ஒன்றாகி ஒப்பில்லாத சுகத்தை அனுபவிப்பார்கள் என்பது நிஜம்.
ஆத்ம துணையைப் பார்ப்பது அதுவும் இன்றைய நவீன உலகத்தில் பார்ப்பது அரிது என்பது உண்மை தான். ஆனால் அது முற்றிலும் சாத்தியமற்றது என்று என்னால் சொல்ல இயலாது. நம்மால் இறைவனை உணர முடிய வில்லை என்பதால் இறைவன் இல்லை என்று சொல்லி விட முடியுமா? அது போல் தான் ஆத்ம துணையும்.
இந்த உலகை எங்கேயோ இருந்து அலங்கரித்துக் கொண்டு இருக்கும் அந்த புனித, அபூர்வ ஆத்ம துணை ஜோடிகளுக்கு கோடான கோடி நமஸ்காரங்களை சொல்லி முடிக்கிறேன்.
வாழ்க வளமுடன்!
கணவனும் மனைவியும் சண்டையிடுவது ஏன்?
ஓரினத் திருமணம் சரியா?
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.